Thursday, October 29, 2009

2. குயிலின் பாட்டு

2. குயிலின் பாட்டு

ராகம் - சங்கராபரணம்
தாளம் - ஏகதாளம்
ஸ்வரம்- "ஸகா-ரிமா-காரீ
பாபாபாபா-மாமாமாமா
ரீகா-ரிகமா-மாமா"

சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க.
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். (காதல்)

1.    அருளே யாநல் லொளியே;
     ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின்,
     இருளே, இருளே, இருளே. (காதல்)

2.    இன்பம், இன்பம், இன்பம்;
     இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
     துன்பம், துன்பம், துன்பம். (காதல்)

3.    நாதம், நாதம், நாதம்;
     நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
     சேதம், சேதம், சேதம். (காதல்)

4.    தாளம், தாளம், தாளம்;
     தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
     கூளம், கூளம், கூளம். (காதல்)

5.    பண்ணே, பண்ணே, பண்ணே;
     பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்,
     மண்ணே, மண்ணே, மண்ணே. (காதல்)

6.    புகழே, புகழே, புகழே;
     புகழுக் கேயோர் புரையுண் டாயின்,
     இகழே, இகழே, இகழே. (காதல்)

7.    உறுதி, உறுதி, உறுதி;
     உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
     இறுதி, இறுதி, இறுதி. (காதல்)

8.    கூடல், கூடல், கூடல்;
     கூடிப் பின்னே குமரன் போயின்,
     வாடல், வாடல், வாடல். (காதல்)

9.    குழலே, குழலே, குழலே;
     குழலிற் கீறல் கூடுங்காலை,
     விழலே, விழலே, விழலே. (காதல்)


No comments:

Post a Comment