Thursday, October 29, 2009

1. கண்ணன்- என் தோழன்




1. கண்ணன்- என் தோழன்


புண்ணாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம் - வத்ஸலரஸம்


பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்

     புறங்கொண்டு போவதற்கே - இனி

என்ன வழியென்று கேட்கில், உபாயம்

     இருகணத் தேயுரைப் பான்; - அந்தக்

"கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்

     காணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு

உன்னை யடைந்தனன்" என்னில் உபாயம்

     ஒருகணத் தேயுரைப் பான். 1


கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்

     கலக்க மிலாது செய்வான்; - பெருஞ்

சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்

     தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன்

ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்

     உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம்

ஈனக் கவலைக ளெய்திடும் போதில்

     இதஞ்சொல்லி மாற்றிடு வான்; 2


பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு

     பேச்சினி லேசொல்லு வான்;

உழைக்கும் வழிவினை யாளும் வழிப்பயன்

     உண்ணும் வழியுரைப் பான்;

அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்

     அரைநொடிக் குள்வரு வான்;

மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்

     வாழ்வினுக் கெங்கள்கண்ணன்; 3


கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்

     கேலி பொறுத்திடுவான்; - எனை

ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்

     ஆறுதல் செய்திடு வான்; - என்றன்

நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று

     நான்சொல்லும் முன்னுணர் வான்; - அன்பர்

கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு

     கொண்டவர் வேறுள ரோ? 4


உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்

     ஓங்கி யடித் திடுவான்; - நெஞ்சில்

கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன் னாலங்கு

     காறி யுமிழ்ந்திடு வான்; - சிறு

பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட

     பாசியை யெற்றி விடும் - பெரு

வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி

     மெலிவு தவிர்த்திடு வான். 5


சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்

     சிரித்துக் களித்திடு வான்; - நல்ல

வன்ன மகளிர் வசப்பட வேபல

     மாயங்கள் சூழ்ந்திடு வான்; - அவன்

சொன்ன படி நடவாவிடி லோமிகத்

     தொல்லை யிழைத்திடு வான்; - கண்ணன்

தன்னை யிழந்து விடில், ஐயனே! பின்

     சகத்தினில் வாழ்வதி லேன். 6


கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்

     குலுங்கிடச் செய்திடு வான்; - மன?

தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி

     தழைத்திடச் செய்திடு வான்; - பெரும்

ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று

     அதனை விலக்கிவிடு வான்; - சுடர்த்

தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந்

     தீமைகள் கொன்றிடு வான். 7


உண்மை தவறி நடப்பவர் தம்மை

     உதைத்து நசுக்கிடுவான்; - அருள்

வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்

     மலைமலை யாவுரைப் பான்; - நல்ல

பெண்மைக் குணமுடையான்; - சில நேரத்தில்

     பித்தர் குணமுடை யான்; - மிகத்

தண்மைக் குணமுடை யான்; - சில நேரம்

     தழலின் குணமுடை யான். ௮


கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்

     குணமிகத் தானுடை யான்; - கண்ணன்

சொல்லு மொழிகள் குழந்தைகள்; போலொரு

     சூதறி யாதுசொல் வான்; - என்றும்

நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது.

     நயமுறக் காத்திடு வான்; - கண்ணன்

அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்

     அழலினி லுங்கொடி யான். 9


காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்

     கண்மகிழ் சித்திரத் தில் - பகை

மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்

     முற்றிய பண்டிதன் காண்; - உயர்

வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்

     மேவு பரம்பொருள் காண்; - நல்ல

கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்

     கீர்த்திகள் வாழ்த்திடு வேன். 10




No comments:

Post a Comment