Thursday, October 29, 2009

5. கண்ணன் - என் அரசன்

5. கண்ணன் - என் அரசன்

பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
     பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
     நாள்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான். 1

கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
     கண்ணிற் காண்ப தரினெத் தோன்றுமே
எண்ணமிட்டெண்ண மிட்டுச் சலித்துநாம்
     இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே. 2

படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
     பணமுண்டாக்கல் எதுவும் புரிந்திடான்
'இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்'
     என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான். 3

கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
     கோலு யர்த்துல காண்டு களித்திட
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
     மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான். 4

வான நீர்க்கு வருந்தும் பயிரென
     மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிர்க்கவும்,
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள்
     தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான். 5

காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்
     கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால்
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;
     நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே? 6

நாம வனவலி நம்பியி ருக்கவும்,
     நாணமின்றிப் பதுங்கி வளருவான்;
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;
     சிறுமை கொண்டொளித் தோடவுஞ் செய்குவான். 7

தந்திரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
     சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்;
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;
     வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்குவான். 8

காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
     கணத்தி லேபுதி தாக விளங்குவான்;
ஆல கால விடத்தினைப் போலவே,
     அகில முற்றும் அசைந்திடச் சீறுவான். 9

வேரும் வேரடி மண்ணு மிலாமலே
     வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
     பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான். 10

சக்கரத்தை யெடுப்ப தொருகணம்;
     தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;
இக்க ணத்தில் இடைக்கண் மொன்றுண்டோ?
     இதனுள் ளேபகை மாய்த்திட வல்லவன்காண்! 11

கண்ண னெங்கன் அரசன் புகழினைக்
     கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்;
திண்ணை வாயில் பெருங்கவந் தேனெனைத்
     தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான். 12

நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;
     நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே
     வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான். 13

கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!
     கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே!
அண்ண லின்னருள் நாடிய நாடுதான்
     அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே! 14


No comments:

Post a Comment