Thursday, October 29, 2009

2. கண்ணன்- என் தாய்



2. கண்ணன்- என் தாய்


(நொண்டிச் சிந்து)




உண்ண உண்ணத் தெவிட்டாத - அம்மை
     உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே - என்றன்
     வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், - என்னைக்
     கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே - பல
     மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். 1


இன்பமெனச் சில கதைகள் - எனக்
     கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் - கெட்ட
     தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் - எனும்
     இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; -அதில்
     அற்புதமுண் டாய்ப்பர வசமடை வேன். 2


விந்தைவிந்தை யாக எனக்கே - பல
     விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை - அதில்
     தண்ணமுதம் போல ஒளி பரந்தொழுகும்.
மந்தை மந்தையா மேகம் - பல
     வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;
முந்தஒரு சூரியனுண்டு - அதன்
     முகத்தொளி கூறுதற்கொர் மொழியிலையே. 3


வானத்து மீன்க ளுண்டு - சிறு
     மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிடவே - மனம்
     நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு - எந்தக்
     காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;
மோனத்தி லேயிருக்கும் - ஒரு
     மொழியுரை யாதுவிளை யாடவருங்காண். 4


நல்லநல்ல நதிகளுண்டு - அவை
     நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்
     விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;
எல்லையதிற் காணுவ தில்லை; - அலை
     எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை
     ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். 5


சோலைகள் காவினங் கள் - அங்கு
     சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய் - அங்கு
     தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும் நிறைந் தே - மிக
     நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;
கோலமுஞ் சுவையு முற - அவள்
     கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். ௬




தின்றிடப் பண்டங்களும் - செவி
     தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக ளும்,
ஒன்றுறப் பழகுதற் கே - அறி
     வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக்
     கொடுநெருப் பாய், அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே - இந்த
     நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். 7


இறகுடைப் பறவைக ளும் - நிலந்
     திரிந்திடும் விலங்குகள் ஊர்வன கள்
அறைகடல் நிறைந்திட வே - எண்ணில்
     அமைந்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் - எனத்
     தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத்தாள்; - அதை
     நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. 8


சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை
     தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே - நான்
     வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே
கோத்தபொய் வேதங்களும் - மதக்
     கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந் நடை யும் - இன
     மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்! 9


வேண்டிய கொடுத்திடு வாள்; - அவை
     விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்; - அண்ணன்
     அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;
யாண்டுமெக் காலத்தி னும் - அவள்
     இன்னருள் பாடுநற் றொழில்புரி வேன்.
நீண்டதோர் புகழ்வாழ் வும் - பிற
     நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். 10








No comments:

Post a Comment